பாகிஸ்தானில் திருமண நிகழ்ச்சியின் போது 2 ஆண்களுடன் நடனமாடி பாட்டு பாடிய 4 இளம்பெண்களை பழங்குடியின கவுன்சிலை சேர்ந்தவர்கள் படுகொலை செய்துள்ளனர். பாகிஸ்தான் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள கோகிஸ்தான் மாவட்டத்தில் நேற்று ஒரு திருமணம் நடந்தது.
அப்போது 4 இளம்பெண்கள் ஆண்களுடன் சேர்ந்த நடனமாடி பாட்டுப்பாடி உற்சாக இருந்துள்ளனர். இந்த தகவல் அறிந்து, பழங்குடியின கவுன்சில் (ஜிர்கா) உறுப்பினர்கள் ஆத்திரம் அடைந்தனர். உடனடியாக திருமணம் நடந்த இடத்துக்கு சென்று நடனமாடிய பெண்களையும் ஆண்களையும் அடித்து உதைத்தனர். பின்னர் 4 பெண்களையும் படுகொலை செய்தனர்.
இந்த தகவலை அதிகாரிகள் மறுத்துள்ளனர். அதுபோல் ஒரு சம்பவமே நடக்கவில்லை. பெண்கள் கொல்லப்பட்டதற்கு அடிப்படை ஆதாரமில்லை என்று கூறியுள்ளனர். எனினும், இதுகுறித்து விசாரணை நடத்த பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக் உத்தரவிட்டுள்ளார். திருமண நிகழ்ச்சியில் 5 பெண்கள், 2 ஆண்கள் கொல்லப்பட்டதாகவும் கருத்து வெளியாகி உள்ளது.
இதுகுறித்து கைபர் பக்துன்கவா தகவல் தொடர்பு துறை அமைச்சர் மியான் இப்திகார் கூறுகையில், பெண்கள் கொல்லப்பட்டது குறித்து கோகிஸ்தான் மாவட்ட நிர்வாகம், டிஐஜி ஹசாரா ஆகியோருடன் பேசினேன். அதுபோல் எந்த சம்பவமும் நடக்கவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர் என்றார்.








