மன்னார் முசலிப் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட முள்ளிக்குளம் கிராமத்தில் தற்போது கடற்படையினரின் குடும்பங்கள் மிகவும் இரகசியமான முறையில் பாதுகாப்புடன் குடியமர்த்தப்பட்ட நிலையில் வாழ்ந்து வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
யுத்தம் இடம்பெற்றபோது 07-09-2007 அன்று குறித்த முள்ளிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 400 குடும்பங்கள் உட்பட முசலியில் உள்ள அனைத்து கிராம மக்களும் இடம்பெயர்ந்து சென்றனர். இந்த நிலையில் யுத்தம் முடிவடைந்த பின் குறித்த பிரதேசங்களில் உள்ள மக்கள் கடந்த 2009ஆம், 2010ஆம் ஆண்டுகளில் மீள் குடியேற்றம் செய்யப்பட்டனர்.
இதன் போது கரடிக்குளி, மரிச்சுக்கட்டி,பாலைக்குளி,மொட்டை தீவு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த முஸ்ஸிம் மக்களும் பூக்குளம் கிராமத்தைச் சேர்ந்த நீர்கொழும்பு மக்களும் அடிப்படை வசதிகளுடன் மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால், முள்ளிக்குளம் கிராம மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்படவில்லை. கடந்த 5 வருடங்களுக்கு மேலாக அவர்கள் மேற்கொண்டு வந்த முயற்சியின் பலனாக தற்போது முள்ளிக்குளம் கிராமத்தில் குடியமர்த்தாது அருகில் உள்ள கிராமத்தில் குடியேற்றம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் குறித்த முள்ளிக்குளம் கிராமம் சுற்றிவர கடற்படையினருடைய பாதுகாப்பில் காணப்படுகின்றது.
இந்த நிலையில் குறித்த முள்ளிக்குளம் கிராமத்தை அண்டிய பகுதிகளினுள் சென்ற மக்களுக்கு அதிர்ச்சியூட்டும் தடயங்கள் காணப்பட்டுள்ளன. குறித்த கிராமத்தினுள் மக்களுடைய வீடுகள் பல திருத்தப்பட்ட நிலையில் சிங்கள மக்கள் குடும்பம் குடும்பமாக வாழ்ந்து வருகின்ற விடயம் தெரிய வந்துள்ளது.
கடற்படையினர் தமது குடும்பங்களை அழைத்து வந்து தமிழ் மக்களின் வாழ்விடங்களை ஆக்கிரமித்து தமது குடும்பங்களை குடியேற்றியுள்ளனர். சுமார் நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கு வாழ்ந்து வருகின்றன. எவரும் உள்ளே சென்று பார்க்க முடியாத அளவிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
முள்ளிக்குளம் கிராமத்தில் உள்ள வயற்காணியில் தற்போது கடற்படையினர் சிறு போக நெற் பயிர்ச் செய்கையை மேற்கொண்டு வருவதோடு மரக்கறித் தோட்டம் ஒன்றையும் செய்து வருகின்றனர்.
முள்ளிக்குளம் பகுதியில் உள்ள கடற்கரையில் கடல் உணவுகளைப் பிடித்து தென் பகுதிக்கு ஏற்றுமதி செய்கின்றனர். எமது சொந்த மண்ணில் எம்மை மீள் குடியேற விடாது அதனை அதியுயர் பாதுகாப்பு வலயமாக்கி கடற்படையினரின் குடும்பங்களை குடியமர்த்தி விட்டு எம்மை நடுக்காடுகளினுள் குடியமர அனுமதித்துள்ளமை எவ்வகையில் நீதி என மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.








